மூடப்படும் டாஸ்மாக் மதுக் கடைகள்.. அனைத்து பார்களுக்கும் பூட்டு! குடிகாரர்களுக்கு வெளியான அறிவிப்பு!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் அதனோடு இணைந்த மதுக்கூடங்கள், தனியார் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள், மனமகிழ் மன்ற பார்கள் ஆகியவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மூலம் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகம் முழுவதும் சில்லரை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்படுகின்றன.
இந்த மதுக்கடைகளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் 180 மில்லி, 360 மில்லி, 740 மில்லி ஆகிய அளவுகளில் விற்கப்படுகிறது. 140 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன.

டாஸ்மாக்
நாள்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் இருக்கிறது. சாதாரண நாட்கள் மட்டும் அல்ல, அது வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். பொங்கல் தீபாவளி ஆகிய நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபான பார்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமல்லாது தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களோடு இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்களில் இருக்கும் பார்கள், பப்புகள், கிளப்புகள் என தனியார் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 2025 ஆம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் விடுமுறை
அதே நேரத்தில் வருடத்தில் பத்து நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. திருவள்ளுவர் தினமான ஜனவரி 15, குடியரசு தினமான ஜனவரி 26, மே 1 தொழிலாளர் தினம், வள்ளலார் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் டாஸ்மாக் மூடப்படுகிறது. மேலும் தேர்தல், அசாதாரண சூழ்நிலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
அந்த வகையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல் பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
டாஸ்மாக் கடை மூடல்
அந்த வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில்," மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3. எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 15.08.2025 (வெள்ளிக் கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications