தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை! ஒவ்வொரு ஊருக்கும் பறந்தே செல்லலாம்- கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல இப்போது கார், பஸ், ரயில், விமானம் என்று பல வகை போக்குவரத்து வசதிகள் உள்ளன. விரைவில் இந்த லிஸ்டில் ஹெலிகாப்டரும் இணைய இருக்கிறது.

ஹெலிகாப்டர் சேவை: ஏனென்றால் தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் ஹெலிகாப்டர் மூலம் செல்லும் வழிமுறைகளை உருவாக்கி, அதற்கான அரசாணையை வெளியிடத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்திற்குள் இந்த ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை கீழ் தமிழகம் முழுக்க பயன்படுத்தப்படாமல் இருக்கும் சுமார் 80 ஹெலிபேடுகளைப் பயன்படுத்த ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு அனுமதி தரப்படும் என்றும் இதன் மூலம் நகரங்களுக்கு இடையே மிக வேகமாகச் சென்று வரும் சூழல் உருவாகும் என்றும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
திட்டம் என்ன: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஹெலிபேடுகளை புக் செய்வது, பராமரிப்பது ஆகியவற்றை எளிதாக்கும்.. தமிழகத்திற்குள் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் இந்த முடிவு விமான நிறுவனங்களுக்குப் பயனளிப்பது மட்டுமின்றி.. சாமானியர்களும் குறைந்த விலையில் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்தும். மேலும் இது உள்ளூர் உற்பத்தித் துறையை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்" என்றார்.
இந்தத் திட்டம் படிப்படியாக மாநிலம் முழுக்க விரிவாக்கம் செய்யப்படும் என்று டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இது அவசரக்கால மருத்துவ சேவைகள், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், சுற்றுலா உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் ஆப்ரேஷன்கள்: ஹெலி திஷா (மத்திய அரசின் ஹெலிகாப்டர் ஆப்ரேஷன்களை கண்காணிக்கும் செயல்முறை) மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அனுமதி வழங்கும் ஆன்லைன் போர்ட்டலான ஹெலி சேவா ஆகியவற்றின் அடிப்படையில் இந்த செயல்முறை உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் பல்வேறு அரசு நிறுவனங்கள், ஹெலிபேட் மற்றும் ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களின் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை: இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் போது வரும் சிக்கல்கள் குறித்து இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் இப்போது இருக்கும் ஹெலிபேட்கள் பல அமைப்புகள் நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.. இது ஒருங்கிணைந்த முடிவை எடுப்பதைக் கடினமாக்குவதால் இது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உதாரணமாகத் திருச்சி நகரில் நான்கு ஹெலிபேடுகள் இருக்கும் நிலையில், அவை முறையே ஏர்போர்ட் ஆத்தாரிட்டி ஆப் இந்தியா, தமிழ்நாடு போலீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெல் நிர்வாகத்திற்குச் சொந்தமாக இருக்கிறது. திருச்சி மட்டுமின்றி மாநிலத்தில் பல இடங்களிலும் இதை நிலை.. இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்தே ஆலோசனை நடந்து வருகிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன: அதேநேரம் இத்திட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு ஹெலிபேடிற்கும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிவிப்பார்களாம். அதாவது உரிய வேலி பாதுகாப்பு, பயணிகள் வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் இருப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே ஹெலிபேட்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கட்டணம் எவ்வளவு: இத்திட்டத்தில் டிட்கோ அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிபேடுகளே அதிகளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு அங்கு ஹெலிபேடுகளை அமைக்கவும் டிட்கோ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணமே இதற்கு வசூலிக்க டிக்டோ திட்டமிட்டுள்ளதாக சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications