ஊரடங்கு காலத்திலேயே மதுவிற்பனையில் புது சாதனை.. சென்னையை முறியடித்த மதுரை.. செம்ம வசூல்
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு காலத்தில் திறக்கப்பட்ட பின் அதிக வசூல் ஆகியுள்ளது.
Recommended Video
சென்னை பெருநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர தமிழகத்தில் மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7ம் தேதி திறக்கப்பட்டது. ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை விடப்பட்டது. இதேபோல் ஆகஸ்ட் மாதமும் ஞாயிறு அன்று விடுமுறை விடப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இயங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதுவிற்பனை 170 கோடிக்கு மேல் இருக்கிறது. மற்ற நாட்களில் 100 கோடி அளவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இயக்கப்படுகிறது.

வசூல் அதிகம்
அரசுக்கு நிதி வருவாயை அதிகம் தரும் ஒரே துறையாக தற்போது டாஸ்மாக் திகழ்ந்து வருகிறது, இந்நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்த காரணத்தால் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே 20 கோடிக்கு மேல் வசூல் ஆனது.

இதுவே முதல் முறை
இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக டாஸ்மாக் கடைகளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாம். கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு முதல் முறையாக டாஸ்மாக் திறக்கப்பட்டதால் மது விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

52 கோடிக்கு மது
வழக்கம் போல் மதுரை மண்டலத்தில் மிக அதிகபட்சமாக 52.45 கோடிக்கும், அதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 51.27 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ50.65 கோடிக்கும் ,சேலம் மண்டலத்தில் 49.30 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.58 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளது.

குவிந்த குடிமகன்கள்
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ248 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஏனெனில் அடுத்த இரண்டு நாட்கள் (சுதந்திர தினம் மற்றும் ஞாயிறு) மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் பலரும் வாங்கி குவித்தனர். இந்நிலையில் இந்த வாரம் ரூ.250 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின் ஊரடங்கு காலத்தில் இவ்வளவு வசூல் என்பது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications