விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்! தொடர் போராட்டத்தை முடிக்க.. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தமிழக அரசு!
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.
இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த கைதுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.

ஆசிரியர்களுக்கு என்ன பிரச்சனை?
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு .8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் மட்டுமே வழங்கப்பட்டது. தொடக்கத்தில் இழந்த ஊதிய முரண்பாடு ரூ.ரூ.3,170 என்று இருந்த நிலையில், இப்போது ரூ.16,000 என்கிற அளவில் மாறியிருக்கிறது.
தேர்தல் வாக்குறுதி
இத்தனைக்கும் இரண்டு ஆசிரியர்களும் ஒரே வேலையைதான் செய்கிறார்கள். அப்படியெனில் இந்த ஊதிய முரண்பாடு ஏன்? என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று, ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2018ல் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தார். 2021ல், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்றும் கூறியிருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 311ல் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
குழு அமைப்பு
பொறுத்து பார்த்த ஆசிரியர்கள் கடந்த 2022ல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 5 நாட்களாக தொடர்ந்தது. இதனையடுத்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். குழுவும் உருவாக்கப்பட்டது. இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதற்காகவும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications