குஜராத்துக்கு பதிலடி கொடுக்குமா தமிழ்நாடு? விஜய் வெளியிடும் புதிய தொழில் கொள்கை.. விரைவில்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் அடுத்த பெரிய அறிவிப்பாக புதிய தொழில் கொள்கை வெளியாகவுள்ளது. ஒரு பக்கம் குஜராத் 2047-க்குள் 3.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இலக்குடன் புதிய தொழிற்துறை கொள்கையை வெளியிட்டுள்ள நிலையில், மறுபக்கம் தமிழ்நாடு 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது.
இந்த சூழலில், தவெக அரசின் புதிய தொழில் கொள்கை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பட்ஜெட்டுக்கு முன் முக்கிய அறிவிப்பு
தவெக அரசு தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் 2026-27 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசு இடைக்கால பட்ஜெட் மட்டுமே வெளியிட்ட நிலையில் விஜய் தலைமையிலா தவெக அரசு நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இதனையொட்டி மாநில வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய கொள்கை மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, அனுமதி வழங்கும் செயல்முறைகளை வேகப்படுத்துவது மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி தேவைகளுக்கு ஏற்ப புதிய சலுகைகளை வழங்குவது போன்ற அம்சங்கள் இந்த கொள்கையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஏற்றார் போல் புதிய முதலீடுகளும், புதிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் வரும்.
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் ஏற்றுமதி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு, அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய முதலீட்டு மையமாக உருவெடுக்க வேண்டும் என்பதே இந்த இலக்கின் அடிப்படை நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் முதல்வர் முன்னிலையில் புதிதாக ரூ.18,600 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்த இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (FICCI), சென்னை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (MCCI) உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட ஆலோசனைகளும் நடைபெற்றுள்ளன.
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது, உற்பத்தி துறையை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலியில் தமிழ்நாட்டின் பங்கை அதிகரிப்பது ஆகியவை அரசின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
குஜராத்தின் மாபெரும் சவால்
தமிழ்நாடு புதிய தொழில் கொள்கையை தயாரித்து வரும் நேரத்தில், குஜராத் அரசு "விக்சித் குஜராத் தொழிற்துறை கொள்கை 2026" என்ற பெயரில் புதிய தொழில் வளர்ச்சி திட்டத்தை இந்த வார துவக்கத்தில் வெளியிட்டது.
இந்த கொள்கை திட்டம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதையும், 2047-க்குள் 3.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதையும் குஜராத் இலக்காக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாநிலங்களுக்கு இடையிலான முதலீட்டு போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உற்பத்தி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகிய துறைகளில் தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications