சனிக்கிழமையை விடுங்க! தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு? விரைவில் அமலாகிறதா?
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமையும் பத்திரங்களை பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்படுகிறது. சொத்துகளை வாங்குவோரும் விற்போரும் வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வருவதை தவிர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்குதான் சொத்து வாங்குவோர் தங்களது பத்திரங்களை பதிவு செய்துக் கொள்வார்கள். இதற்கான தனி நபர் விவரங்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சொத்தின் மதிப்பிற்கேற்ப பதிவு கட்டணங்களையும் ஆன்லைனில் செலுத்தலாம். இதன் பிறகு பத்திரப்பதிவுக்கான நாள், நேரம் கொடுக்கப்பட்டு ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த நாளில் சார் பதிவாளர் அலுவலகம் சென்றால் பத்திரப்பதிவை செய்துக் கொள்ளலாம்.
அது போல் முகூர்த்த நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன் வழங்கப்படும். இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதனால் சொத்து வாங்குவோரும் விற்போரும் பத்திரப்பதிவில் கையெழுத்திட விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு என்ற திட்டம் அமலானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதே போல் ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணமாக ரூ 1000 வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பத்திரப்பதிவு துறையில் நல்ல வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பத்திரப்பதிவு துறையினர் அரசிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனவே அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தை பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு நடைமுறையால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண பதிவிற்கு ரூ 300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ 5000 வரை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைய திருமண பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இணையதளம் அல்லது செல்போன் மூலம் திருமணப் பதிவை செய்ய விரைவில் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications