‘இந்த’ புறம்போக்கில் மட்டும் கால் வச்சுடாதீங்க! பட்டாவும் கிடைக்காது.. ஒன்னும் கிடைக்காது! வார்னிங்!
சென்னை: தொடர்ந்து நீண்ட கால ஆக்கிரமிப்பு மற்றும் பிரச்சனை இல்லாத புறம்போக்கு நிலங்களை வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக பலரும் நிலம் குறித்த ஆவணங்களை அளித்து விண்ணப்பம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நீர் புறம்போக்கு உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து இருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் பட்டா வழங்கப்படாது என்பதோடு அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என எச்சரித்துள்ளனர் வருவாய் துறையினர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக பட்டா பெற முடியாமல் இருந்த நிலையில் அந்த ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உரிய பயனாளிகளை கண்டறிந்த பட்டா வழங்கும் வகையில், 6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் தமிழக அரசு அமைக்கவுள்ளது. சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்ய முடியாமல் இருப்பது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நான்கு மாவட்டங்களில் இருக்கக் கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்த்து மொத்தம் 57,084 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் நபர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட வகை நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். அந்த வகையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் வழி புறம்போக்கு பகுதிகளில் நீண்ட காலமாக வசித்தாலும், அவர்களுக்கு பட்டா வழங்கப்படாது. மேலும் நீர்வழி புறம்போக்கு நிலங்களில் வசித்து வருவது கண்டறியப்பட்டால் அந்த நிலங்கள் அரசின் மூலம் சுவாதீனம் எடுத்துக் கொள்ளப்படுவதோடு ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் கோவில் நிலங்கள், நீர்நிலை, மேய்ச்சல் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசித்தாலும் பட்டா வழங்கப்படாது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தில் வசித்து இருக்க வேண்டும், மூன்று லட்சத்திற்கும் குறைவான வருமானம் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுபவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications