தேதி குறிச்சாச்சு.. களமிறக்கப்படும் புதிய தலைகள்.. மொத்த அதிகாரிகள் டீமும் மாறுது.. ஸ்டாலின் பிளான்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. குறிப்பாகத் திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தென்காசி செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டார். அது தவிரத் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராக நியமனம் செய்யப்பட்டார். இது தவிர லட்சுமி ஐஏஎஸ், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலை மனதில் வைத்து அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக காரணங்களை காட்டி.. நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட கூடாது என்பதால் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்கும் ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர்.
லோக்சபா தேர்தலுக்கு பின் மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் டாப் செயலாளர்களாக இருக்கும் 2 பேர் டெல்லி செல்ல அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இரண்டு பேருமே தற்போது தமிழ்நாட்டில் மிக பெரிய செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். முக்கியமான சில துறைகளே அவர்களுக்கு கீழ்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் டாப் சாய்ஸ் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே தற்போது டெல்லிக்கு மத்திய பணிக்கு செல்ல இருக்கின்றனர். தமிழக அரசு இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சக முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.
இந்த நிலையில்தான் அவர்கள் மாற்றப்படுவதோடு சேர்ந்து பல அதிகாரிகள் மாநில அளவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பல செயலாளர்கள் முக்கிய பொறுப்பிலிருந்து மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தலைமை செயலகத்தில் முக்கியமான சில துறைகளை கவனிக்கும் செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
லோக்சபா தேர்தல் முடிந்ததும் இந்த மாற்றம் நடக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வரும் வரை அதிகாரிகளை மாற்ற முடியாது என்பதால் ஜூன் 4ம் தேதி ரிசல்ட் வந்ததும் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications