இந்தியாவின் நம்பர் 1 மாநிலம்..டெங்கு பாதிப்பில் முதலிடம் பிடித்த தமிழகம்! 205ல் 20866 பேர் பாதிப்பு!
சென்னை: கடந்த 2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பதிவாகியுள்ள நிலையில், அதில் அதிகப்படியான பாதிப்புகள் தமிழகத்தில் தான் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை வெளியிடப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மட்டும் 20,866 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், டெங்கு பாதிப்பில் தமிழகம் நாடு முழுவதும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2025ன் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடையிடையே மழை பெய்தது. இதன் காரணமாக தெருக்கள், சாலையோரங்கள் போன்ற இடங்களில் நீர் தேங்கிக் கிடந்தது.
இந்த தேங்கிய நல்ல நீரில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டை கொசுக்கள் அதிக அளவில் பெருகியதால், டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் உயரும் நிலை ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு இந்த நிலை மேலும் மோசமடைந்தது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மொத்தம் 1,13,450 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 95 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 20,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக மகாராஷ்டிராவில் 13,333 பேர், கேரளத்தில் 10,239 பேர், உத்தரபிரதேசத்தில் 8,926 பேர், தெலங்கானாவில் 8,139 பேர், கர்நாடகத்தில் 6,756 பேர், மணிப்பூரில் 5,457 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு விவரத்தைப் பார்க்கும் போது, கேரளாவில் 49 பேர் டெங்குவினால் உயிரிழந்துள்ளனர். அதன்பின் மகாராஷ்டிராவில் 13 பேரும், தமிழகத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிக கவனம் செலுத்தி, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications