இந்த ஒரு தவறை மட்டும் பண்ணிடாதீங்க.. டிராபிக் போலீஸ் தூக்கிடும்.. சென்னையில் அதிரடி ரூல்ஸ்.. கவனம்
இந்த புதிய விதிகள் இன்றோடு அமலுக்கு வருகிறது.
சென்னை: சென்னையில் புதிய சாலை அபராத தொகை ஒன்றை சென்னை போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர். போக்குவரத்தை சரி செய்யும் விதமாக இந்த அபராத தொகையை போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

போக்குவரத்து விதி மீறல்
அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

டிராபிக்
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்னொரு விதிமீறல் ஒன்றிற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்
அந்த வகையில் சென்னையில் டிராபிக் சிக்னல்களில் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டி நிற்க கூடாது. அப்படி நின்றால் அது விதி மீறல். இந்த குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் இந்த குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இனி 500 ரூபாய் வாங்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாப்லைன்' கோட்டை தாண்ட கூடாது என்பது தொடர்பாக நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார் மேற்கொண்டனர்.

முக்கியம்
சாலைகளில் சிவப்பு விளக்கு எரியும் நேரத்தில் பலர் கோட்டிற்கு முன் நிறுத்தாமல் ஜீப்ரா கிராஸில் வண்டியை நிறுத்துகிறார்கள். இதனால் மக்கள் நடப்பது சிரமம் ஆகிறது. இதை தடுக்கவே இந்த அபராதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிகள் இன்றோடு அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications