மொத்த "போகஸும்" இங்கேதான்.. "வீக் எண்ட்" மழை பொளக்க போகிறது.. வானிலை வல்லுனர்கள் முக்கிய வார்னிங்
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று இரவில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்தது.
இந்த மேலடுக்கு சுழற்சியும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மாற்றமும் இணைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மழை
அதன்படியே தமிழ்நாட்டில் வங்கக் கடலில் வடக்கு இலங்கை பகுதிக்கு அருகே நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை ரெய்ன்ஸ் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பான சென்னை ரெயின்ஸ் செய்துள்ள ட்விட்டில், தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீதுதான் எல்லோரின் பார்வையும் உள்ளது.

வானிலை
இதன் காரணமாக தமிழ்நாடு மிக கனமழை பெய்வதற்கான தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்த வார இறுதிநாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பல இடங்களில் பெய்ய உள்ளது. இன்று டெல்டாவில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தாழ்வு பகுதி
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வானிலை மாடல்களில் லேசான மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் மழை அளவிலும், மழை பெய்யும் இடங்களிலும் லேசான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மொத்தமாக பார்த்தால் மழை வரும் நாட்களில் தீவிரமாக பெய்யும் என்பதில் மாற்றம் இல்லை. இன்றும் நாளை காலையும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும், என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு மையம்
இன்னொரு பக்கம் சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்ட கணிப்பில், சென்னையில் 10 முதல் 13ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்று கூறி உள்ளது. அதே சமயம் தற்போதய கணிப்பின்படி காற்றழுத்த தாழ்வு புயலாக மாற வாய்ப்பு இல்லை. 11, 12ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

48 மணி நேரம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தீவிரம் அடையும். அதன்பின் தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். இன்று தமிழ்நாட்டில், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications