வெளுத்து வாங்கும் கனமழை! தமிழ்நாட்டில் எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சம் பெற்றுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. ஆனால் நேற்று இரவில் இருந்து சென்னையில் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை.

மழை
தற்போது மழை தென் மாவட்டங்களையும், டெல்டா மாவட்டங்களையும் நோக்கி நகர்ந்து உள்ளது. சென்னையில் மழை குறைந்த நிலையில் மயிலாடுதுறை, தஞ்சாவூரில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. நேற்று சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்தது.

நேற்று எங்கே மழை
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கணித்து உள்ளது. சென்னையில் மழை குறையும்.

இன்று எங்கே மழை
சென்னையில் ஆங்காங்கே லேசாக மழை பெய்யும். ஆனால் கடந்த இரண்டு நாட்கள் அளவிற்கு மழை பெய்யாது. தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுமுறை
இந்த நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications