வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை...சென்னைவாசிகளும் அனுபவிக்க தயாராகுங்கள்
உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவித்துள்ளது. பகல் நேரங்களில் தற்போது மேக மூட்டம் காணப்படுகிறது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. கொடநாடு, நீலகிரி, ஏற்காட்டில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், கோத்தகிரியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்றைய தினம் தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
29, 30ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 31ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.