காதலர் தினம் வரை இடி மின்னலுடன் தமிழகத்தில் மழை பெய்யுமாம்... வறண்ட வானிலையில் ஒரு ஜில் செய்தி
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: பங்குனி மாத வெயில் போல பகல் நேரங்களில் வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்தது. மழை எப்போது நிற்கும் வெள்ளம் எப்போது வடியும் என்று ஏங்கத் தொடங்கினர் மக்கள். டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை விடை பெற்று விட்டது மாசி மாதம் முடிய பனிகாலம்தான் என்றாலும் கோடை வெப்பம் போல எங்கும் சுட்டெரித்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் இருப்பதால் வெளியின் தாக்கம் பெரிதாக பாதிப்பு இல்லை.
வறண்ட வானிலையாக இருக்கிறதே...மழைக்காக தென்மேற்கு பருவமழை காலம் வரை காத்திருக்க வேண்டுமா? அவ்வப்போது கோடை மழை போல லேசாக பெய்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். அப்படி மழையை எதிர்பார்த்த மக்களுக்காக வானிலை மையம் நல்ல செய்தி ஒன்றை சொல்லியுள்ளது.

கீழடுக்குச் சுழற்சி
குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை
நாளைய தினம் தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சனிக்கிழமை மழை
நாளை மறுநாள் சனிக்கிழமையன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

காதலர் தினத்தில் மழை
ஞாயிறன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம் எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications