தமிழ்ப் புத்தாண்டு.. "அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும்.." அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும் என மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இந்த நன்னாளில், அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீண்டும் உறுதி செய்ததை இந்த இனிய நாளில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். மலர இருக்கும் 'சோபகிருது' ஆண்டில், தமிழர்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். நல்லதே நடக்க, நானிலம் சிறக்க, மகிழ்ச்சி பொங்க, மனிதநேயம் சிறக்க வரவேற்கிறது தமிழ் புத்தாண்டு, வாழ்வோம் பல்லாண்டு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை, கேஎஸ் அழகிரி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தில், "சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் முத்திரைப் பதிக்கும் முத்தான சிந்தனைகள் உருவாகி உத்வேகம் பிறக்கட்டும். இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், நிறைவான மகிழ்ச்சியையும், புதிய எழுச்சியையும் அளிக்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஈடில்லா பெருமைமிக்க, இனிய தொன்மை மிக்க, நீட்சிமிகு வரலாற்றை கொண்ட தமிழக மக்கள், சித்திரை திங்களின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ்ப் புத்தாண்டு, வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக, நன்மைகள் பிறக்கும் ஆண்டாக, ஒளி பிறக்கும் ஆண்டாக, மகிழ்ச்சி நிலைக்கும் ஆண்டாக அமைய பாஜக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மத்திய பாரதிய ஜனதா அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications