அன்று பழனியில் வங்கி ஊழியர்... இன்று மேற்கு வங்கத்தில் உதவி ஆட்சியர்... சாதித்த தமிழ் ஓவியா
திண்டுக்கல்: கல்லூரி படிப்பை முடித்து வங்கியில் பணியை தொடங்கிய இளம்பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, முறையாக பயிற்சியும் முடித்து தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகள் தமிழ் ஓவியா தோட்டக்கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் படிப்பை முடித்த தமிழ் ஓவியா, பழனியில் உள்ள கனரா வங்கியில் ஏ.எஃப்.ஓ.வாக (அஸிஸ்டெண்ட் அக்ரிகல்ச்சர் பீல்டு ஆஃபிஸர்) பணியில் சேர்ந்து ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த தமிழ் ஓவியா, கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டே முதன்மைத் தேர்வுக்கு தயாராகி உள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, மெயின் தேர்வுக்கான பயிற்சியை சென்னையில் பெற வேண்டி இருந்ததால் தனது வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்துள்ளார்.
தமிழ் ஓவியாவின் வைராக்கியமும், தொடர் முயற்சியும் அவரை ஐ.ஏஸ்.எஸ். தேர்வில் மேற்குவங்க கேடரில் தேர்ச்சி பெற வைத்தது. இதையடுத்து முசோரியில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடித்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சவுத் 22 பர்கானா என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓடிடியால் சினிமாவிற்கு ஆபத்தா?
இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ் ஓவியா ஐ.ஏ.எஸ்.ஸின் சகோதரர், ஆம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் அதிகம் இருப்பதால், எனது தங்கை சப் கலெக்டராக பதவியேற்றவுடன் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் கவனித்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் உதவிகளை கொண்டு சேர்ப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. பொறுபேற்றவுடன் சவாலான பணிகளை அவர் ஏற்று செய்து வருகிறார் என தமிழ் ஓவியா பற்றி பெருமிதம் தெரிவிக்கிறார அவரது அண்ணன்.