தமிழ்த்தாய் பாடலுக்கு பதில்.. புதுவை பாடல்! சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், புதுவை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பபாசி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடக்கிறது. இந்த நிலையில் இன்று 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தக கண்காட்சியில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக பாரதிதாசன் எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது. முதலில் இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தான் பாடப்படும் என்று அறிவிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீமான் உள்ளிட்டோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட எழுந்ததும், நீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாடல் பாடப்பட்டது.
சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இந்த நிகழ்வுக்கு விளக்கம் அளித்துள்ளது.
பபாசி கூறுகையில், சென்னை புத்தக கண்காட்சியில் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், வேறு ஒரு பாடல் பாடப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. முதல்வர் மற்றும் துணை முதல்வரை சீமான் ஒருமையில் பேசியதற்கும் பபாசிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. என்று விளக்கம் அளித்து உள்ளது.












Click it and Unblock the Notifications