ஜியா- ஜஹாத் தம்பதிக்கு குழந்தை.. LGBTQ+ சமூகத்திற்கே மிகப் பெரிய மைல்கல்.. தமிழச்சி எம்பி பாராட்டு
சென்னை: 3ஆம் பாலினத்தவர்களின் கனவை நனவாக்கிய இந்த குழந்தை, எல்ஜிபிடி சமூகத்திற்கே மிகப் பெரிய மைல்கல் என்று ஜியா- ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜியா பாவல் மற்றம் ஜஹாத். இவர்களில் ஜியா பாவல் ஆணாக பிறந்து பெண்ணாக மாற விரும்பினார். அது போல் ஜஹாத் பெண்ணாக பிறந்து ஆணாக மாற விரும்பினார்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் எப்படியாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருந்தது. இயற்கை முறையில் இவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததால் இருவரும் குழந்தையை தத்து எடுக்க முயன்றனர்.

மூன்றாம் பாலினத்தவர்
ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களாக இருப்பதால் தத்தெடுத்து வளர்ப்பதிலும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜஹாத் ஆணாக மாறி இருந்தாலும் அவரால் கருத்தரிக்க முடியும். குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற செய்தியை இவர்கள் அறிந்தனர். இதையடுத்து நீண்ட யோசனைக்கு பிறகு தாங்கள் பெற்றோர் ஆகலாம் என முடிவெடுத்து ஊரும் சமுதாயமும் எது சொன்னாலும் பரவாயில்லை, தங்களுக்கு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர்.

கோழிக்கோடு மருத்துவமனை
இதையடுத்து இருவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டனர். ஜஹாத்திற்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி விட்டனர். இதையடுத்து இருவரும் கருவுறுவதற்கான சிகிச்சையை தொடங்கினர். இந்த நிலையில்தான் இருவரும் கர்ப்பகால போட்டோஷூட்டை நடத்தி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

போட்டோ ஷூட்
இவர்கள் போட்டோ ஷூட் எடுத்த போது ஜஹாத் 8 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் ஜஹாத்திற்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறப்பை ஜியா தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்தார். ஆனால் என்ன குழந்தை என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.

தாய்ப்பால்
குழந்தைக்கு தாய் பால் கொடுக்க பால் தானம் வழங்கும் வங்கியில் இருந்து பாலை பெற்று குழந்தைக்கு தருகிறார்கள். இந்த குழந்தை பிறப்பு குறித்து ஜியா கூறுகையில் இது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்வான தருணம். நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த போது என்னை காயப்படுத்தும் அளவுக்கு எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எங்கள் குழந்தைதான் பதிலடி. எங்களை ஆதரித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

வாழ்த்து
கோழிக்கோடு மருத்துவமனையில் உள்ள குழந்தையையும் திருநங்கை தம்பதியையும் நேரில் சந்தித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இவர்களுக்கு நிறைய பேர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து
நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கை தம்பதி குழந்தை பெற்ற செய்தியை மேற்கோள்காட்டி, தமிழச்சி தனது பதிவில், ஜியா பாவலுக்கு ஜஹாத் பாசிலுக்கும் குழந்தை பிறந்துள்ளதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாட்டில் முதல்முறையாக திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தி மிகப் பெரிய மைல்கல். இது திருநங்கையர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த எல்ஜிபிடி சமூகத்தினருகே பெரிய செய்தியாகும்.

விழிப்புணர்வு
மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய உலகை உருவாக்க ஜியா- ஜஹாத்தின் குழந்தை வழியை ஏற்படுத்தும். இதன் மூலம் விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்கவும் இந்த குழந்தை வழிவகுக்கும். தம்பதிக்கு வாழ்த்துகள். குழந்தையின் எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்துகிறேன் என தமிழச்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications