நீங்க இருக்கும் போது புஸ்ஸி ஆனந்த் எதுக்கு? மக்கள் ஏத்துக்கமாட்டாங்க! விஜய்க்கு முக்கிய நபர் அட்வைஸ்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக மக்களை சந்திக்க முன்வர வேண்டும் என்றும் அதைவிடுத்து புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விடக்கூடாது எனவும் அவருக்கு அட்வைஸ் வந்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய், முழுநேர அரசியலுக்கு வருவதையும் உறுதி செய்துள்ளார். விஜய் தான், இப்படியொரு அறிக்கையை வெளியிட்டாரா அல்லது அவரது பெயரில் யாரேனும் விளையாடுகிறார்களா என்பதை உறுதி செய்யவே ஊடகங்களுக்கு 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை போகிற போக்கில் நிகழ்த்திக்காட்டினார்.

இந்நிலையில் பிரபல சினிமா புள்ளியும், திரைப்படத் தயாளிப்பாளருமான ராஜன், நடிகர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். புஸ்ஸி ஆனந்தை எதற்கெடுத்தாலும் முன்னிறுத்துவதை விட்டுவிட்டு விஜயே நேரடியாக இறங்கி வந்து மக்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். விஜய் அரசியலில் வெற்றிபெற வேண்டும் என தாம் நினைப்பதாகவும் எம்.ஜி.ஆர். செய்த தொண்டில் 20% ஆவது விஜய் செய்ய வேண்டும் எனவும் ராஜன் தெரிவித்தார். புஸ்ஸி ஆனந்தை விஜய் முன்னிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நெத்தியடியாக ராஜன் பேசியிருக்கிறார்.
புஸ்ஸி ஆனந்தை பொறுத்தவரை சற்று முன்கோபக்காரர் என்ற பிம்பம் உள்ளது. விஜய் ஒருங்கிணைத்த நிகழ்வுகளிலேயே பயனாளிகளிடம் கடுகடுப்புடன் நடந்துக்கொண்டவர் என்பதால் அவர் மீதான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புஸ்ஸி குறித்து சினிமா தயாரிப்பாளர் ராஜனும் இப்படி கூறியிருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் தவறில்லை என்றும் வெற்றியும், தோல்வியும் அவரது கையில் தான் இருக்கிறது எனவும் கூறியுள்ள ராஜன், நல்ல கொள்கைகளை வகுத்து மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவியது, மாணவர்களை ஊக்கப்படுத்தியது என கடந்த காலங்களில் விஜய் அறிவாளியாக செயல்பட்டிருக்கிறார் எனவும் ராஜன் பாராட்டச் செய்தார்.












Click it and Unblock the Notifications