கோர்ட் படிச்சு படிச்சு சொன்னதே.. எல்லை மீறிய தவெக தொண்டர்கள்.. விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் மாதா மண்டப சுவரை இடித்த தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடையே அதை மீறி தவெக நிர்வாகிகள் இப்படி நடந்து கொண்டது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நேற்றைய தினம் புத்தூர் அண்ணா சிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் . அப்போது காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி தமிழக வெற்றி கழகத்தினர் கட்டிடங்கள் மேற்கூரைகளில் ஏறி அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

அப்போது விஜய் பேசிய இடத்திற்கு அருகாமையில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் தொண்டர்கள் அதிக அளவு ஏறி அமர்ந்தால் கீழே விழுந்தது. மேலும் சுவருக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளும் சாய்க்கப்பட்டது. நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய்க்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
ஏற்கனவே நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கூட்டங்களால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வைப்புத்தொகையை வசூலிக்க தமிழக அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது. இந்த வைப்புத்தொகை, கட்சித் தொண்டர்களால் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும்.
விஜய் ரசிகர்கள் மீது வழக்கு
இந்த வழிகாட்டுதல்கள் குறித்து செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் இ. ராஜ் திலக்கிற்கு நீதிபதி என். சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்த விரும்பும் பிற அமைப்புகளுக்கும் பொருந்தும்.
அரசியல் கட்சிகளின் பெரிய கூட்டங்களின் போது கடந்த காலங்களில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அரிதாகவே கிடைத்தது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த ரிட் மனு
பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் நோக்கில் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் இயற்றப்பட்டது. தனியார் சொத்துக்களையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர 1994 ஆம் ஆண்டில் சட்டம் திருத்தப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டத்தின் நோக்கம், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதனை ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களே இழப்பீடு வழங்க பொறுப்பாகும் என்பதே. இருப்பினும், இந்த விதிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இது குறித்து நீதிபதி குமார் கூறுகையில், "சட்ட விதிகள் இழப்பீடு வழங்க வழிவகை செய்தாலும், அவை இத்தனை ஆண்டுகளாக முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய கூட்டங்களின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பீட்டையும் ஈடுசெய்ய, வைப்புத்தொகை விதிப்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது" என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த ரிட் மனு மீதான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தனது பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டியிருந்தது.
காவல்துறை தமிழக வெற்றிக் கழக நிகழ்வுகளுக்கு மட்டும் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக கட்சி புகார் அளித்தது. மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி கூறுகையில், திருச்சியில் செப்டம்பர் 13 அன்று நடந்த விஜய் பேரணிக்கு காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்தது.
அதில் ஒரு நிபந்தனை கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்வில் பங்கேற்கக்கூடாது என்பதாகும். தனது நிகழ்வுகளில் யாரையும் பங்கேற்பதை கட்சி எப்படி தடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகம் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலுவான ஜனநாயக சக்தியாகும். ராகவாச்சாரி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்றும், அதன் அடிப்படை சித்தாந்தம் மதச்சார்பற்ற சமூக நீதி, மதச்சார்பின்மை, சமூக சமத்துவம், உள்ளடக்கிய பிரதிநிதித்துவம், மொழியியல் நல்லிணக்கம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் இருமொழிக் கொள்கையை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கட்சியில் சேர ஈர்த்ததாகவும், அது விரைவாக ஒரு வலுவான ஜனநாயக சக்தியாகவும், மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது என்றும் பிரமாணப் பத்திரம் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications