திருவாரூர் மிருதங்கக் கலைஞர் பக்தவத்சலத்திற்கு பத்மஸ்ரீ விருது.. மத்திய அரசு அறிவிப்பு
சென்னை: திருவாரூர் மிருதங்கக் கலைஞர் பக்தவத்சலத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. மிருதங்க இசைத்துறையில் பல தசாப்தங்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கி, இந்திய பாரம்பரிய இசையை உலக அரங்கில் கொண்டு சென்ற திருவாரூரைச் சேர்ந்த பக்தவத்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
9 வயதிலேயே மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிய பக்தவத்சலம் தஞ்சாவூர் பாணி மிருதங்க இசையில் உலகளவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். ஸ்பெயின் ஒலிம்பிக் தொடக்க விழா உள்பட பல சர்வதேச நிகழ்வுகளில் இந்தியாவின் சார்பில் பக்தவத்சலம் பங்கேற்றுள்ளார். பக்தவத்சலத்தின் வாழ்நாள் சாதனையை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மிருதங்க இசைக் கலைஞர்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க இசைக் கலைஞர் பக்தவத்சலம். இவரது தந்தை பெருமாள் பிள்ளை, தாயார் ஆனந்தவல்லி. கடந்த 1957-ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறுவயதிலேயே தந்தையை இழக்க நேரிட்டது. தனது ஐந்து வயதிலேயே தாயாரிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கினார்.
பின்னர் தனது தாய்மாமா கிருஷ்ணமூர்த்தியிடம் மிருதங்கக் கலையை கற்றார். வெறும் 9 வயதிலேயே தனது தாயாருக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தாலும், மிருதங்கத்தின் மீது இருந்த தீவிர ஆர்வம் காரணமாக கல்லூரிப் படிப்பை தொடராமல் இசைத் துறையையே தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்தார்.
பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
தஞ்சாவூர் பாணியில் மிருதங்கம் வாசிப்பதில் உலகப் புகழ் பெற்ற பக்தவத்சலம், இந்தியாவின் சார்பில் பல்வேறு சர்வதேச இசை விழாக்களில் பங்கேற்றுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிலும் மிருதங்கம் வாசித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மிருதங்க இசைத்துறையில் அவர் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பையும், இந்திய பாரம்பரிய இசையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சேவையையும் பாராட்டும் வகையில், இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications