சத்தம் பத்தாது விசில் போடு..தமிழக வெற்றிக் கழக மாநாடு எப்போது? இன்று அறிவிக்கிறார் தலைவர் விஜய்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில் மாநாட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என இன்று அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு வசூலிலும் ரசிகர் பட்டாளத்திலும் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலை நோக்கியே அவரது நகர்வுகள் இருந்திருக்கிறது.

ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது, கிளைக் கழக நிர்வாகிகள் வரை நியமனம் செய்தது, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியினரை போட்டியிட வைத்தது என விஜய் மறைமுகமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. சொன்னது போலவே பிப்ரவரி மாதத்தில் அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரையும் அறிவித்தார். அதற்குப் பிறகு ஆலோசனைக் கூட்டம், கோட் சூட்டிங், மாணவர்கள் சந்திப்பு என பிசியாக இருந்த அவர் 2026 தேர்தலில் களமிறங்குவது உறுதி என அறிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்கு முன்னதாக சினிமாவில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் நடித்து வெளியாகி உள்ள கோட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் கலெக்ஷனை அள்ளியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பல இடங்கள் பார்த்த பிறகு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் அதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. 21 கேள்விகளை காவல்துறையினர் கேட்ட நிலையில் அதற்கு பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அனுமதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 55 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே நடத்துவதாக திட்டமிடப்பட்டிருக்கும் 23ஆம் தேதிக்கு இன்னும் ஏறக்குறைய 10 நாட்களே இருக்கும் நிலையில், மாநாட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என நாளை அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கியதாக மகிழ்ச்சி செய்தியை தனது தொண்டர்களுடன் விஜய் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் மாநாட்டு தேதியையும் விஜயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறிவந்தனர்.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மாநாடு எப்போது நடக்கும் என்ற தேதியை இன்று விஜய் தனது அறிக்கை வாயிலாக அறிவிப்பார் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். ஏற்கனவே அறிவித்த 23ஆம் தேதியே மாநாடு நடத்தப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications