அண்ணாமலை பேச்சால் கூட்டணியில் விரிசலா? என்ன நடக்கிறது பாஜகவில்? தமிழிசை விளக்கம்!
சென்னை: அண்ணாமலை பேச்சால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையை முன்வைத்து சர்ச்சை
ஆனால், அதற்கு மாறாக, அண்ணாமலை சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், கூட்டணி அரசு அல்ல தமிழ்நாட்டில் பாஜக அரசு அமையும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெறுகிறது. அதிமுக பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா சொன்னதுதான் அதிகாரப்பூர்வமான கருத்து. தமிழகம் என்று வரும்போது நயினார் நாகேந்திரன் சொல்வதுதான் கட்சியின் கருத்து.
அண்ணாமலை சொல்வது அவரது சொந்தக் கருத்து
அண்ணாமலை சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார். சகோதரர் அண்ணாமலை தெளிவாகச் சொல்லிவிட்டார் அது தனது சொந்த கருத்து என்று சொல்லிவிட்டார். கட்சியின் கருத்தாக இருந்தால் தான் நமது பதில் சொல்ல வேண்டும். அதைச் சொந்த கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரபூர்வ தலைவர்கள் கூறுவதுதான் அதிகாரபூர்வ கருத்து. அண்ணாமலையின் கருத்தை எதிர்க்கட்சிகள் தான் திரித்து வெளியிட்டன. தெளிவாக ஒரு கூட்டணி அமைத்து அதற்காக தெளிவான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிவிட்டார். இது கூட்டணி கட்சி சார்ந்த மற்ற தலைவர்களுக்கும் தெரியும்.
எல்லாரும் மாறுவார்கள்
கூட்டணி தர்மம் மற்ற தொண்டர்களுக்கும் தெரியும். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றால் போல கூட்டணி அமைத்து செயல்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும். அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக மற்றவர்கள் எல்லாம் மரியாதை குறைவாக இல்லை. மற்ற தலைவர்களை மரியாதை குறைவாக நடத்தவும் இல்லை.
ஒரு கட்சியில் புதிய தலைவர் நிர்வாகம் வந்தது என்றால், எல்லாமே மாறும். பழைய நிர்வாகத்தினர் அகற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் வருவார்கள். ஒரு கட்சி தலைவர் கட்டமைப்பு அப்படி. ஒரு தலைவர் வந்தால் நிர்வாகம் முழுவதும் மாறும். செயற்குழு உறுப்பினர்கள் மாறுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மாறுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதால் அவர்களெல்லாம் மாறுவார்கள்.
ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதத்தில் பேசுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக. அதனுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம். எல்லா கூட்டணியும் கட்சியினரும் சேர்ந்தே செயல்படுவோம் " என்றார்.
சுதாகர் ரெட்டியிடம் புகார்?
இதற்கிடையே, அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பொதுவெளியில் பேசக் கூடாது என அறிவுறுத்துமாறு மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை விவாதித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கெனவே கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற அண்ணாமலைதான் காரணம் எனவும், மீண்டும் அண்ணாமலை பேச்சால் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் நிலை வரக் கூடாது என தமிழிசை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த தகவலை தமிழிசை மறுத்துள்ளார். பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் அரசியல் ரீதியாக சில கருத்துகளை பரிமாறிக் கொண்டேன். பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனையை மக்களிடம் எடுத்துச் சொல்வது குறித்தும் விவாதித்தேன். கூட்டணி பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தி இருக்கிறது என தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications