தமிழிசை தேர்தலில் போட்டியிட கூடாது.. 5 சீட்டுக்காக நடக்கும் சண்டை.. பாஜகவில் புதிய குழப்பம்?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து பாஜக வேட்பாளர்களில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்று பாஜகவில் எதிர்ப்பு குரல் எழுந்து இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து பாஜக வேட்பாளர்களில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்று பாஜகவில் எதிர்ப்பு குரல் எழுந்து இருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
மொத்தம் ஐந்து தொகுதிகளில் பாஜக தமிழகத்தில் போட்டியிட உள்ளது. இதற்கான உடன்படிக்கை நேற்றுதான் செய்யப்பட்டது.
குழப்பம்
இந்த நிலையில் பாஜக பெறவிருக்கும் ஐந்து தொகுதிகளில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. பாஜகவில் பல முக்கிய தலைவர்கள் இருப்பதால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது, யாருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது என்ற கேள்வியும், விவாதமும் எழுந்து உள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது.
எச்.ராஜா
இந்த லோக்சபா தேர்தலில் எச்.ராஜாவிற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று பாஜகவின் சில தரப்பினர் கூறியதாக செய்திகள் வருகிறது. முக்கியமாக தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவாளர்கள் எச்.ராஜாவிற்கு இதில் வாய்ப்பளிக்க கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. எச்.ராஜாவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மோசம்
இதனால் தற்போது பாஜகவில் உள்ள எச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் ஆதரவாளர்கள் பலர் தமிழிசைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. தமிழிசைக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க கூடாது. எச்.ராஜா போட்டியிட மாட்டார் என்றால், தமிழிசையும் போட்டியிட கூடாது என்று அவர்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. அதேபோல் நாங்கள் சொல்லும் ஐந்து பேருக்குத்தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிகிறது.
நீடிக்கும்
இந்த பிரச்சனை இதோடு முடியாமல் தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஏனென்றால் பாஜகவில் இன்னும் நிறைய தலைவர்கள் வாய்ப்பு கேட்டுக் கொண்டு இருப்பதால், யாருக்கு சீட் கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இதில் நேரடியாக தலையிடுவார் என்றும் கூறுகிறார்கள்.