திமுக பயந்துருச்சு போல..விஜய் மாநாட்டிற்கு இடம் தருவதில் என்ன பிரச்னை? அண்ணனுக்கு ஆதரவாக வந்த அக்கா
சென்னை: விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். விஜய்யின் மாநாட்டைப் பார்த்து அச்சம் ஏன்? உங்களுக்கு ஏன் அவ்வளவு பயம், ஒரு இடத்தைக் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க வேண்டும் என விழுப்புரம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சியினர் வருவார்கள் என்பதால் அதற்காக பார்க்கிங், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட இருக்கிறது. பார்க்கிங்கு மட்டுமே சுமார் 60 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இடது புறம் உள்ள சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் பார்க்கிங் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில் விஜய் மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி அளிப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? என கேள்விகள் கேட்டுள்ள நிலையில், அதற்கு விஜய் தரப்பு பதிலளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கார் ரேஸ் உங்களால் அவ்வளவு சீக்கிரம் நடத்த முடிகிறது. ஆனால் ஒரு புதிய கட்சி தொடங்கி ஒரு மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தைத் தருவதற்கு அவர் லீவுல போயிருக்கிறார்.. இவரு லீவுல போயிருக்கிறார். 21 கேள்வி, 22 கேள்வி என கேட்கிறார்கள். எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளை நீங்கள் முடக்க நினைக்கிறீர்கள் என்பது தெரிகிறது. திமுகவுக்கு அவ்வளவு பயம் வந்துவிட்டது.
விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். விஜய்யின் மாநாட்டைப் பார்த்து அச்சம் ஏன்? உங்களுக்கு ஏன் அவ்வளவு பயம், ஒரு இடத்தைக் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? பயம். நான் சினிமா எல்லாம் பார்ப்பது இல்லை. விஜய்யின் கட்சியைத் தடுப்பதைப் போல காட்சியையும் தடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அவருடைய கட்சி மட்டுமல்ல எந்த புதுக்கட்சி ஆரம்பித்தாலும், ஒரு மாநாடு நடத்தும்போது, ஒரு இடத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறேன். கொள்கை எல்லாம் அவர் பிறகு சொல்லட்டும். அதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஒரு கார் ரேசுக்கு எவ்வளவு தூரம் சரி செய்து கொண்டுவந்தீர்கள்" என ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications