உச்சாணி கொம்பிற்கு சென்ற தமிழிசை..! கடின உழைப்பை அங்கீகரித்த தலைமை..!
Recommended Video
சென்னை: பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு;
காங்கிரஸ் தலைவருக்கு மகளாய் பிறந்து இன்று பாஜகவில் மிகப்பெரும் தலைவராய் உருவெடுத்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். பேச்சையே மூச்சாய் கொண்டு வாழ்ந்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் ஒரே புதல்வி தமிழிசை சவுந்தரராஜன். சிறுவயதில் தந்தை குமரி அனந்தனோடு கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு சென்று தந்தையின் பேச்சுத் திறமையை கண்டு வியந்தவர், பின்னாளில் தானும் ஒரு நல்ல பேச்சாளராக வேண்டும் என எண்ணினார்.

பேச்சுக்கு தடை
நமது ஊரில் பெண் பிள்ளைகள் பேசினால் ''வாயாடி'' என்ற அடைமொழியை தந்துவிடுவார்கள் என அஞ்சிய தமிழிசையின் தாயார் அவரை மருத்துவராக்க முனைந்தார். குமரி அனந்தனும் தன் மகள் அரசியலுக்கு வந்தால் அது வாரிசு அரசியல் என்ற முத்திரை வந்துவிடும் என நினைத்து தமிழிசை அரசியலுக்கு வர ஆட்சேபனை தெரிவித்தார். மனதில் அரசியல் ஆசைகள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் தந்தைக்கு பக்கபலமாக உதவும் பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தார் தமிழிசை.

திருப்புமுனை தந்த குமரி
1996 பொதுத்தேர்தலில் குமரி அனந்தன் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டதால் அவருக்காக குமரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தார் தமிழிசை. அப்போது குமரி அனந்தனை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டவர் பொன்.ராதாகிருஷ்ணன். காங்கிரஸில் வழக்கம் போல் நிலவிய கோஷ்ப்பூசல் தமிழிசைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மேலும் தேர்தல் பணிகளில் காங்கிரஸார் காட்டிய சுணக்கத்தை கண்டு தமிழிசை அந்தக் கட்சியை வெறுக்கத் தொடங்கினார். அதேநேரம் பாஜக முகாமில் ஆற்றப்பட்ட தேர்தல் பணிகள் தமிழிசையை ஈர்த்தது.

மாற்று யோசனை
காங்கிரஸில் இணைந்தால் தானே வாரிசு அரசியல் என விமர்சிக்கப்படும், பாஜகவில் இணைந்தால் என்ன என தமிழிசையின் மனதில் பொறி தட்டுகிறது. அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து இந்திய அளவில் பிரபலமானது. உடனடியாக தன்னை பாஜக உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அதன் பிறகு பேச்சாளர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், தேசியச் செயலாளர், மாநிலத் தலைவர் என பாஜகவில் தமிழிசைக்கு பதவிகள் தேடி வந்தன.

மகளிடம் கோபம்
மகள் பாஜகவில் இணைந்தது குமரி அனந்தனுக்கு காங்கிரஸில் விமர்சனங்களை பெற்றுத் தந்தது. பாஜக சித்தாந்தத்தை எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக்க, நீ அந்தக் கட்சியில் சேர்வதா? எனக் கூறி மகள் தமிழிசையிடம் குமரி அனந்தன் 7 மாதங்கள் வரை பேசவில்லை. இதனால் அப்போது மனதொடைந்து போன தமிழிசைக்கு காலம் இன்று மிகப்பெரும் வெகுமதியை வழங்கியுள்ளது.

கைவிடாத தலைமை
மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் முன் வைக்கும் விமர்சனங்களுக்கு சுடச் சுட தமிழிசை எதிர்வினையாற்றும் தகவல் டெல்லிக்கு எட்டியுள்ளது. கட்சியை விட்டுக்கொடுக்காத வகையில் அவர் ஊடகங்களை எதிர்கொண்ட விதமும் அமித்ஷாவை கவர்ந்துள்ளது. தமிழிசையின் தலைவர் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ள நிலையில் அவரை ஆளுநர் ஆக்கி உச்சாணி கொம்பில் அமர வைத்துள்ளது கட்சித் தலைமை.












Click it and Unblock the Notifications