உரிமைத்தொகையை திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.. தமிழிசை பரபர கோரிக்கை!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கணக்கிட்டு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது திமுக. இந்நிலையில் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

அரசு ஊழியர்கள், ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது. ஏழை, எளிய மக்களை இந்த திட்டம் சென்றடைய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் ஜூலை 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டோக்கன்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனையும் விண்ணப்பங்களையும் கொடுப்பார்கள். விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதியில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தொகையை புதுச்சேரியில் நாங்கள் வழங்கிவிட்டோம். தமிழ்நாட்டில் ரூ.1000 உரிமைத்தொகையை குடும்பத்தலைவிகளுக்கு வழங்க அது வேண்டும், இது வேண்டும், இது இருந்தால் கிடைக்காது என பல நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தது. இப்போது செப்டம்பர் 15ஆம் தேதி கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கணக்கிட்டு பெண்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications