தேர்தல் ஆணையம் நேர்மையாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்கல- தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: தேர்தல் ஆணையம் நேர்மையாக நடப்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
SIR தொடர்பான கூட்டத்தில் இன்று பங்கேற்றுப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது போள தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைத்து வளர்ச்சி திட்டங்களை பாஜக கொண்டு வரும். பாஜக மதவாதக் கட்சி அல்ல, மனிதவாத கட்சி.

SIR என்றால் திமுக ஏன் பதறுகிறது என்றால், இது தீவிர வாக்காளர் பதிவு இயக்கம். நேர்மையான வாக்காளர்கள் பதிவு இயக்கம். திமுக கடந்த 2 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் தெரியுமா? பொய்யான வாக்காளர்களை பதிவு செய்து, ஒரு பூத்துக்கு 20 பேராவது அதிகமாக இருக்க வேண்டும் எனச் சொல்லி ஒரு போலியான வாக்காளர் பதிவை நடத்தி முடித்து விட்டார்கள். அதனால் தான் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பதிவை எதிர்க்கிறார்கள்.
SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில், பாஜகவுக்கு பயந்து போய் சில கட்சிகள் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். முதலமைச்சருக்கு பயந்து தான் பல கட்சிகள் வந்தன. வந்தவர்கள் எல்லோரும் ஒரேயடியாக பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்கவில்லை என்கிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடப்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன், "தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு இன்று தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் விமான நிலையம் பின்புறம் கொடூரமாக நடந்தேறி இருக்கிறது.
ஒரு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மனதை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மறுபடியும் மனக்கலக்கத்தோடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கல்லூரி வளாகங்கள் தொடங்கி சாலைகள் வரை பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெண்கள் வாழுகின்ற சூழ்நிலை மிக மிக அதிர்ச்சி அளிக்கிறது.
தலைகுனிய விடமாட்டோம் தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் வெளியிலேயே தலை காட்ட முடியாத ஒரு இருண்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மிக மிக வேதனை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பின்மை பற்றியும் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதை பற்றியும் அடிக்கடி பதிவிடும் நிலைமை வருவதை நினைத்து வேதனை அடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications