பாரத மாதா என்றே சொல்கிறோம்.. யாரும் இந்திய மாதா என்று சொல்வதில்லை.. தமிழிசை சொன்ன பாயிண்டை பாருங்க!
சென்னை: இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் மற்றும்போது தேசிய உணர்வு மேலோங்கும், பாரத மாதா, பாரத தேவி, பாரத தேசம் என்று சொல்கிறோமே, அதனால் பாரதம் என்பதே சரியானது என தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்தியா பாரதம் என்று மாற்றப்பட உள்ளது. இதனை உயர் மட்டக் குழு அப்படி ஒரு பரிந்துரையை கொடுத்து இருக்கிறது. பாரதியார் கூட பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று தான் பாடியிருக்கிறார்.

நாம் கூட பாரத மாதா என்று தான் சொல்கிறோம் இந்திய மாதா என்று சொல்வதில்லை. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் பாரதம் அல்லது இந்தியா என்று தான் ஷரத்து இருக்கிறது.
சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியபோது மொழி உணர்வு, மாநில உணர்வு, தேசிய உணர்வு இருந்ததை போல், இந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுது அதே தேச உணர்வு மேலோங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதில் பல விமர்சனம் இருக்கலாம். பாரதமாதா, பாரத தேவி, பாரத தேசம், என்று இருக்கும் போது - பாரதம் என்பது சரி என்பது எனது கருத்து." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய தமிழிசை, "என்னை பொருத்தவரை வன்முறை எங்கும் இருக்க கூடாது. அமைச்சர் கே.என்.நேரு சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பெரிய பூஜை போட்டுள்ளார். சனாதானத்தை ஒழிப்போம் என்று கூறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டில் தான் உரையாற்ற போகிறார், பேசுவது ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருக்கிறது" என்றார்.
முன்னதாகம் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின்படி, அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்தது. இந்தத் தகவலை என்சிஇஆர்டி குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்தார். இதையொட்டி சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தமிழிசை இந்த மாற்றத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications