இது அண்ணா வளர்த்த தமிழல்ல.. ஆண்டாள் வளர்த்த தமிழ்.. உதயநிதிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை
சென்னை: பெண்களின் முன்னேற்றத்துக்கான ஒட்டுமொத்த பெருமையைும் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கொடுத்துவிட முடியாது. அவர்கள் குரல் கொடுப்பதற்கு முன்பே பல தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். உதயநிதியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ராகுல் காந்தி உண்மையிலேயே வயநாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர், வேறொரு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதை மறைத்துவிட்டார். வயநாடு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களை ஏமாற்றிவிட்டார்.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் தகுதியோடு அக்கட்சியைச் சேர்ந்த பலர் இருக்கையில் பிரியங்கா காந்தியை கட்சி நிறுத்துகிறது. இதன் மூலம் அக்கட்சி வாரிசு அரசியல்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. பாஜக இளம் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளது. அவர் அந்த மண்ணின் மகள். சமீபத்தில் வயநாடு மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராகுல் காந்தி என்ன செய்தார். பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன. இதுபற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் முடிவெடுப்பார்கள். விஜய் மாநாட்டுக்கு தொடர்ந்து திமுக அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. விஜயின் மாநாட்டுக்கு செல்வதை தடுப்பதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்றனரா என தெரியவில்லை.
தீபாவளி பண்டிகைக்காக பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுப்பது மிகவும் தவறானது. விஜய் மாநாட்டுக்குச் செல்வதை தடுப்பதற்காகத்தான் ஒருவேளை இப்படி செய்கின்றனரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவை பொறுத்தவரை எங்களுடைய ஹீரோ பிரதமர் மோடி.
இந்த நாட்டை மூன்றாவது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர்கள், இளைஞர்கள் சேர்ந்திருக்கின்றனர். தவெக மாநாடு நடத்துவதற்கான இடத்திற்கே திமுக அரசு சார்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. விஜயைப் பார்த்து தமிழக அரசு பயந்துபோய் இருக்கிறது. அதனால் தான் இடம் கொடுப்பதில் இருந்து பல்வேறு தடங்கல்களைச் செய்து வருகின்றனர். வருங்கால அரசியல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
அமைச்சர் ராஜகண்ணன் மீதான 400 கோடி மதிப்பிலான நில ஆக்கிரமிப்பு தொடர்பான அறப்போர் இயக்கத்தின் புகார் குறித்த கேள்விக்கு, அமைச்சர் ராஜகண்ணன் இதனை மறுத்தால் கூட இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வந்தவுடனேயே அவசர அவசரமாக அமைச்சராக்கப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்பாக வந்து வழக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதனால், நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் குறித்து அமைச்சர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊழல் இல்லாத அரசாக திமுகவை சொல்ல முடியாது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு இல்லையெனில் அதனை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்து மதம் தொடர்பாக தான் பேசிய பேச்சு திரிக்கப்பட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிவது குறித்த கேள்விக்கு, அவர் கலந்து கொண்ட மாநாட்டின் பெயர் சனாதன ஒழிப்பு மாநாடு. டெங்கு, மலேரியாவைப் போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் என்ன பேசினார் என்பது பதிவாகியுள்ளது. அவர் பேசியது திரிக்கப்பட்டதாக எவ்வாறு கூற முடியும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கான பெருமை பெரியாரையும் அண்ணாவையுமே சாரும் என்றும் அவர்கள் பேசியதையே தான் பேசியதாகவும் உதயநிதி சொல்கிறார். அவரது கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒட்டுமொத்த பெருமையையும் பெரியாருக்கும் அண்ணாவுக்குமே கொடுத்துவிட முடியாது. ஏராளமான தலைவர்கள் அதற்காக போராடி இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் குரல் கொடுப்பதற்கு முன்பே சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் போராடியுள்ளனர்.
இது அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்டாள் தமிழ் கவிஞராக வந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டு இத்தனை கவிகளைப் பாடியுள்ளார். அப்போது, பெரியாரும், அண்ணாவும்தான் இருந்தார்களா. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இருக்கும் பங்கைவிட பல தலைவர்களுக்கு இதில் பங்கு இருந்தது.
1900 களில் பெண்களுக்காக சக்கரவர்த்தினி பத்திரிகை நடத்தியவர் பாரதி. அவர் சொல்லாத பெண் உரிமையை இவர்கள் பேசினார்களா. காமராஜர் உண்மையிலேயே பெண்களுக்கு இலவச கல்வியைக் கொடுத்தார். அதனால், பெண் முன்னேற்றத்துக்கு இவர்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இவர்கள் அரசியலில் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே பெண் உரிமையை பலரும் பேசியிருக்கிறார்கள். பெண்கள் பலர் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.
இந்து மதத்தைப் பொறுத்தவரை சமூக நீதி எல்லா விதத்திலும் பேசப்பட்டுள்ளது. எனவே, பெண் உரிமை குறித்த முழு உரிமையையும் திமுகவினர் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications