கம்பம் தொகுதியில் களம் காண்பது யார்? திமுகவில் நடக்கும் மல்லுக்கட்டு!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 2 சீனியர் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதால், இப்போதே அங்கு களம் பரபரப்பாக காணப்படுகிறது.
எல்லையோர தொகுதி
தேனி மாவட்டம் கம்பம் தொகுதியை பொறுத்தவரை தமிழக - கேரளா எல்லையோரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு தொகுதியாகும். செழிப்பான விவசாய நிலங்களை உள்ளடக்கிய கம்பம் தொகுதியில் இஸ்லாமியர்கள், பிறமலைக்கள்ளர்கள், ஒக்கலிக கவுண்டர்கள் என பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர்.

2 சீனியர்கள்
இந்நிலையில் இந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறாராம். இதனிடையே இவருக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் மற்றொரு சீனியர் நிர்வாகியான ஜெயக்குமார், கம்பத்தில் களம் காண களப்பணிகளையே தொடங்கிவிட்டாராம்.
கடந்தமுறையே ஜெயக்குமாருக்கு தான் எம்.எல்.ஏ. சீட் என்று பேசப்பட்ட நிலையில் இறுதிக்கட்டத்தில் பல்வேறு சோர்ஸ்கள் மூலம் தலைமையை அணுகி கம்பம் ராமகிருஷ்ணன் சீட் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த முறை எப்படியும் எம்.எல்.ஏ. சீட் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஜெயக்குமார் டீம் பம்பரமாக சுழலத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருணாநிதி காலம்
கம்பம் ராமகிருஷ்ணனை பொறுத்தவரை 2011 முதல் 2021 வரை மூன்று முறை கம்பம் தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறார். அதில் ஒரு முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜக்கையனிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த 2 சீனியர் நிர்வாகிகளுக்கு மத்தியில் தங்க தமிழ்செல்வன் மகனுக்கும் தொகுதியின் மீது ஒரு கண் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கருணாநிதி காலத்திலேயே திமுகவில் தேனி மாவட்ட பொறுப்பாளராக ஜெயக்குமார் இருந்தார் என்பது அவருக்கான ப்ளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது.
- அர்ஷத் கான்












Click it and Unblock the Notifications