ஜெயலலிதா ஆட்சியில்.. உச்சநீதிமன்றம் வரை சென்று மன்றாடிய விஜயகாந்த் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதா ஆட்சியின் போது பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை சென்று மன்றாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் 1984 ஆம் ஆண்டு முதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு மக்களவை நேரலைக்கு LS TV என தனி தொலைக்காட்சியும் மாநிலங்களவைக்கு RS TV என்ற தனி தொலைக்காட்சியும் இயங்கி வருகிறது.
இதன் மூலம் தாங்கள் பிரதிநிதியாக தேர்வு செய்து அனுப்பியவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக இருக்கிறது. இந்த இரு டிவிக்களையும் அந்தந்த செயலாளர் கையாளுவார்.

சட்டசபை நிகழ்வுகள்
நாடாளுமன்றத்தை முன்னுதாரணமாக கொண்டு தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை முதலில் கேட்டவர் தேமுதிக விஜயகாந்த். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதிலிருந்தே சட்டசபை நிகழ்ச்சிகள் நேரலை குறித்து விஜயகாந்த் போராடி வந்தார்.

பேரவை நிகழ்வுகள் நேரலை
பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய அரசுக்கு நிதி நெருக்கடி வந்தால் தனது கேப்டன் தொலைக்காட்சி மூலம் இலவசமாகவே நேரலை செய்து தருவதாக அறிவித்தார். இது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரை வாதாடினார். ஆனால் விஜயகாந்தின் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை.

ஜெயலலிதா
இந்த நிலையில் ஜெயலலிதா ஆட்சியின்போது பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று மன்றாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. 2017ஆம் ஆண்டு அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த போது அவைக்காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஸ்டாலினை இழுத்து தள்ளி சட்டையை கிழித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

முதல்முறை பேரவை நிகழ்வுகள் நேரலை
அப்போதே இந்த நேரலை வசதிகள் இருந்திருந்தால் இந்த விவகாரம் மக்களுக்கு தெரிந்திருக்கும் என திமுகவினரிடையே பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததுமே பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு நேற்று முதல் முதல் முறையாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தாங்கள் தேர்வு செய்த எம்எல்ஏ தங்கள் தொகுதிக்காக எந்தெந்த உரிமைகளை கேட்டு போராடுகிறார் என்பது இனி முதல்முறையாக மக்களுக்கு தெரியவரும்.












Click it and Unblock the Notifications