'யார் விலகினாலும் கவலையில்லை.. பாஜக - அதிமுக கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்..' அண்ணாமலை திட்டவட்டம்
சென்னை: அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது என்றும் கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
நாமக்கல் அடுத்த பொம்மை குட்டை மேடு என்ற பகுதியில் பாஜக சார்பில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மற்றும் பிரதமரின் வேளாண்மை இயற்கை வேளாண்மை காணொலி மூலம் நடைபெற்றது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இயற்கை வேளாண்மை குறித்த காணொலி நேரலை நிகழ்ச்சியை, ஏராளமான விவசாயிகளுடன் அண்ணாமலை பார்வையிட்டார்.

பாஜக
அதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர்கள், சேகோ ஆலைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார். கட்சியின் சார்பில் பிரச்சார விழிப்புணர்வு குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார். அப்போது மற்ற கட்சியிலிருந்து விலகி பலரும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இயற்கை விவசாயம்
இந்நிகழ்ச்சியின்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நமது நாட்டில் விவசாய உற்பத்தியை இரு மடங்காகப் பெருக்கி, விவசாயிகளுக்கு நமது நாட்டில் விவசாய உற்பத்தியை இரு மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில், பிரதமர் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இயற்கை முறையிலான விவசாயத்திற்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தி குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றியுள்ளார். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்குதல், கௌரவ நிதி வழங்குதல், சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக மகசூல் எடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகப் பிரதமர் கூறியுள்ளார்" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய சட்டங்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "விவசாயிகள் இயற்கை வேளாண்மை ஈடுபட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களைப் பிரதமர் அறிவித்துள்ளார். நமது நாட்டின் வேளாண்மைத் தொழிலை முழுவதுமாக உணர்ந்து பிரதமர் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு, மத்திய அரசின் வேளாண்மை உள்ளிட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவது கிடையாது. மூன்று வேளாண் சட்டங்களில் விவசாயிகளே வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு பிரதமர் அந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளார். அதுவும் அந்த மாநில விவசாயிகளின் நன்மை கருதியே நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்ட ஒழுங்கு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். குற்றம்புரிபவர்கள் அச்சமின்றி வெளியில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. அதனை முற்றிலுமாக தமிழக அரசு தடுக்க வேண்டும். இதுவே தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

கருத்துச் சுதந்திரம்
திமுக அரசு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. கருத்துச் சொல்பவர்களைக் கைது செய்வது முறையல்ல. உரிய ஆவணங்களின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின் நலன் கருதிச் செயல்படுத்தி வரும் வேளையில் மாநில அரசு புதியதாக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராமல் உள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தி புதிய திட்டங்களை மாநில அரசு கொண்டுவர வேண்டும்.

காப்பி அடிக்கும் தமிழக அரசு
கோமாரி நோய் தடுப்பூசி இலை தேவையான அளவிற்குத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதே போல கொரோனா தடுப்பூசிகளையும் தேவையான அளவிற்கு உரியக் காலத்தில் மத்திய அரசு வழங்கி வருகிறது தமிழக அரசு கடந்த 6 மாத காலத்தில் எந்த விதமான புதிய புதிய திட்டத்தையும் மக்களுக்காகக் கொண்டு வரவில்லை. இங்கு மோடி அரசின் திட்டத்தை மாநில அரசு காப்பியடித்துச் செயல்படுத்தி வருகிறது. மாநில அரசு சுயமாக எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவது இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி
அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது. கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும்" என்று அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications