தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக- புதுக்கோட்டையில் போஸ்டர், கோவையில் போலீசில் புகார்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்றும் இன்றும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு நடுவே புதுக்கோட்டையில் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோவையில் ஆளுநர் உருவபொம்மையை எரிக்க முயற்சித்த பெரியார் திகவினரை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையில் தன்னிச்சையாக சிலவற்றை சேர்த்தும் தவிர்த்தும் வாசித்தார். ஒரு மாநில அரசின் உரைக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்ட பின்னர், இப்படி சட்டசபையில் தன்னிச்சையாக செயல்பட்டது சர்ச்சையாகிவிட்டது.
சட்டசபையில் ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, அவரது தன்னிச்சையான உரை சபை குறிப்பில் இடம்பெறாது என கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை சற்றும் எதிர்பாராத ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த செயலுக்கு பாஜக, அண்ணா திமுக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் பல்வேறு இடங்களில் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் ஆளுநர் ரவியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் ஆளுநர் ரவி உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள், ஆளுநர் ரவியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் பாஜகவோ, ஆளுநரின் செயல் நியாயமானது என வாதிட்டு வருகிறது. பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்து கொள்ளப்பெறும்". இதனடிப்படையில், சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு( ன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும் அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா? என கொந்தளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவினர் புதுக்கோட்டையில் ஆளுநர் ரவியை ஆதரித்து சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அதில் ஆளுநரின் ஆளுமையே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை நகரத்தின் பல பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் கோவையில் ஆளுநர் ரவியின் உருவபொம்மை எரிப்பு முயற்சிக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர். அத்துடன் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பெரியார் திகவினரை கைது செய்யக் கோரி போலீசில் புகாரும் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications