தொகுதிப் பங்கீடு.. தமிழக பாஜக தலைவர்களை அவசரமாக டெல்லிக்கு அழைத்த அமித்ஷா.. பரபரக்கும் கமலாலயம்!
சென்னை: பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் தமிழக பாஜக தலைவர்கள் அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் குறித்தும், அதிமுக உடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்திருப்பது பலரின் கவனத்தை திருப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையில் பெரியளவில் இணக்கம் ஏற்படவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தால் ஓரளவிற்கு பாஜகவினர் இணக்கம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையிலான மோதலும் முடிவுக்கு வந்தது. இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை காரணமாக இந்த இணக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்து வருகிறது. படிப்படியாக அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
டெல்லியில் தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சி பிரச்சனை மற்றும் அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜேபி நட்டா தலைமையில் நடக்கவுள்ள இந்த ஆலோசனையில் அமித்ஷா, பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனை பாஜக மூத்த தலைவர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் குறித்து டெல்லி மேலிடத்திற்கு புகார் சென்றிருக்கிறது. இதனை களைவதற்கும், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கும் இந்த ஆலோசனை கூட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு 6 மாதமே இருப்பதால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக எத்தனை தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது என்பதை அறியவும், அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாகவும் அமித்ஷா முன்னிலையில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications