திமுகவின் போலி இந்தி எதிர்ப்பு நாடகம்.. தமிழை வளர்க்காமல் இந்தியை எதிர்த்து என்ன பயன்? அண்ணாமலை!
சென்னை: திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு திமுக, மதிமுக, நாம் தமிழர், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சட்டப்பேரவையில் தீர்மானம்
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது

திமுக பொதுக்கூட்டம்
இதனிடையே பாஜக சார்பாக திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் நவ.4ல் தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் மு.க.ஸ்டாலின்
பெரம்பலூரில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, கேஎன் நேரு உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி மக்களிடையே விளக்கும் வகையில் நடைபெற உள்ளது.

அண்ணாமலை ட்வீட்
திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சேவ் அவர் தமிழ் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ''நேற்று தமிழக பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்?

வெளிச்சத்திற்கு வந்துள்ளது
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க திமுக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக பாஜக ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications