இனி நானே பார்த்துக்கிறேன்.. தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பியூஷ் கோயல்.. ஷாக்கில் நயினார்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலே நேரடியாக தேர்வு செய்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது. பாஜக சார்பாக பலமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பியூஷ் கோயல், தொகுதி மக்களுக்கு பரிட்சயமான நபராகவும், கட்சிக்கு உழைத்தவராக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணியை உருவாக்க பாஜக நிர்வாகி பைஜெயந்த் பாண்டா முயற்சித்து வந்தார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கட்டுக்குள் கொண்டுவர பைஜெயந்த் பாண்டா நடத்திய பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழக பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொண்டு வரப்பட்டார். இவர் ஏற்கனவே 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணியை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றியவர்.
எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் நட்பால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயலே சரியான நபர் என்ற முடிவுக்கு அமித்ஷா வந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்த பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது திடீரென அதிமுக தொகுதி பங்கீடு பட்டியல் ஒன்று வெளியாகியது.
அதில் பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜகவுக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. அதனை ஏற்கும் வகையில் பியூஷ் கோயலும் பேசி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
அதேபோல் பாஜக போட்டியிட விரும்பும் 40 தொகுதிகளுக்கான பட்டியலையும் எடப்பாடி பழனிசாமியிடம் பியூஷ் கோயல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பியூஷ் கோயல் அடுத்தக் கட்டமாக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். ஏற்கனவே பாஜகவின் சில தலைவர்கள் சிலர் தங்களுக்கான தொகுதிகளை ரிசர்வ் செய்து வைத்துள்ளனர்.
கடந்த முறை வென்ற தொகுதியாக இருந்தாலும், சிலர் வேறு தொகுதிக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாற விருப்பம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பியூஷ் கோயல் தரப்பில் பாஜக வேட்பாளர்கள் பலமான இருக்க வேண்டும் என்று கருதுவதாக தெரிகிறது.
அதேபோல் பாஜக வேட்பாளர்கள் கட்சிக்கு உழைத்தவர்களாகவும், தொகுதி மக்களுக்கு பரிட்சயமான நபராகவும் இருக்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் தேர்வு செய்து வருகிறார். மேலும், தமிழக பாஜக வேட்பாளர்களை பியூஷ் கோயல் நேரடியாக தேர்வு செய்வது நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications