முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் இன்று திமுக அரசின் முதல் பட்ஜெட்: எகிறும் எதிர்பார்ப்புகள்!
சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திமுக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் நகை கடன்கள் தள்ளுபடி, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 நிதி உதவி, சுங்க சாவடிகள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சட்டசபை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. தேர்தலில் வென்று திமுக மீண்டும் ஆட்சியையும் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையும் ஒருசேர நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
இதற்காக அதிமுக விடியல்கார அண்ணாச்சி.. வாக்குறுதிகள் என்னாச்சி? என்றெல்லாம் கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. ஆனால் திமுக அரசைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக கவனமாக மேற்கொண்டு வருகிறது. திமுகவின் 100 நாட்கள் ஆட்சியில் பெண்களுக்கான இலவச பயண சலுகை தொடங்கி ஏராளமான அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடன்கள் தள்ளுபடிகள்
இந்நிலையில்தான் இன்று தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை- பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இன்று இ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் இடம்பெறப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பு.

பெண்கள், ஆசிரியர்கள்
அதேபோல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல், நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம்- குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு ஆகியவையும் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக இருக்கக் கூடும். போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் குறித்தும் நாளைய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

சமத்துவபுரம், உழவர் சந்தைகள்
சென்னை மாநகரம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையிலான செயல் திட்டம், குழுக்கள் அமைப்பது நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம். கருணாநிதி ஆட்சிக் கால கனவு திட்டங்களான சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், செம்மொழிப் பூங்கா உள்ளிட்டவைகளை சீரமைத்தல், புதிய நடைமுறைகளை கொண்டு வருதல் குறித்தும் நாளை அறிவிப்புகள் வரக் கூடும். அதேபோல் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பிரமாண்ட நூலகங்கள் உருவாக்கும் அறிவிப்பும் இடம்பெறக் கூடும்.

அகழாய்வுப் பணிகள்
கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகளின் விரிவாக்கம், அரசு நிர்வாகத்தில் தமிழ் ஆட்சி மொழியை முழுமையாக செயலாக்குதல் என தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த அறிவிப்புகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படலாம். மாணவர்களுக்கு லேப்டாப், இணைய இணைப்பு வசதி விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புக்கும் சாத்தியம் உண்டு.
Recommended Video

தொழில்துறை சலுகைகள்
அதேநேரத்தில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் யூகங்களாக சில விஷயங்களை கோடிட்டும் காண்பித்திருந்தார். தமிழக அரசின் மோசமான நிதி நிலைமையை பற்றி குறிப்பிட்டதுடன் வரி அல்லாத வருவாய் குறித்தும் பேசியிருந்தார். இதனால் மணல், கிரானைட் குவாரிகள் திறப்பு தொடர்பான அறிவிப்புகளுக்கு சாத்தியம் அத்துடன் குடிநீர் விநியோக முறைகளில் சீர்திருத்தம், மின்கட்டணத்தில் மாறுதல்கள், சொத்து வரிவிதிப்பில் திருத்தங்கள் ஆகியவை தொடர்பான விளக்கங்களும் பட்ஜெட்டில் விவரிக்கப்படக் கூடும் என தெரிகிறது. கொரோனா லாக்டவுனால் தொழில் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில்துறையினருக்கு சலுகைகள், வர்த்தகர்களுக்கு கடனுதவி திட்டங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications