மதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு பதிவு அமைதியாக நடைபெற்று வரும் சூழலில் சட்டசபை இடைத்தேர்தல்கள் வாக்குப்பதிவு நடைபெறும் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் அதிமுக - திமுக கூட்டணியினர் நடுவே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் வாக்கு சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற முயலுவார்கள் என திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தன.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்!
ஆம்பூரில் வாக்குச் சாவடிக்கு அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வந்போது, அவர் கார் கண்ணாடியை உடைத்து அதிமுகவினர் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். காவல்துறை தடியடி நடத்தியதில் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்தது.
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் அதிமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்லூர் வாக்குச் சாவடி மையத்தில் நடந்த மோதலில் ரஞ்சித், அரவிந்த் ஆகியோர் காயமடைந்தனர்.
காலை முதல் அமைதியாக தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், இடைத் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் மோதல்கள் அரங்கேறியுள்ளன. இதை தவிர்த்து பார்த்தால், ஆரணி தொகுதியில் மொத்தம் 5 இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன. ஆரணி டவுன் களத்துமேடு வாக்குச்சாவடி உட்பட 5 இடங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் பானையை தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை தாக்க, பதிலுக்கு அவர்கள் இவர்களை தாக்க என அந்த கிராமமே போர்க்களமாகியுள்ளது.
இதுமட்டுமா, மாலை 6 மணியளவில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில், துணை ராணுவத்தினர், வாக்குச்சாவடியில் கூடிய பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இவை அனைத்துமே மாலையில்தான் நடைபெற்றுள்ளன. அல்லது பிற்பகலுக்கு மேல் நடந்துள்ளன.