நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை : இந்தியாவில் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் எனவே ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னலாடைத் துறையினர் போராட்டம்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் ஜவுளி, பின்னலாடை தொழில் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி திருப்பூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும் பஞ்சு, நுால் போன்றவவைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
மேலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த ஈரோடு பவா்லூம் கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன், நூல் விலை உயர்வால் ஜவுளிகளின் அடக்க விலையும் உயா்ந்துவிட்டது என்றும், ஜவுளித் தொழிலை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினா் வேலை வாய்ப்பின்றி சிரமத்தில் உள்ளனா் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர், நூல் விலை அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் 2வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கவும் நேரிடும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரி உயர்த்தப்பட்டதால் பருத்தி விலை உயர்வு
2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தில் 5 சதவீதம் அடிப்படை சுங்க வரி, 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10 சதவீதம் சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11 சதவீதமாக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணம் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியும், பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இறக்குமதிக்கான வரி நீக்க வேண்டும்
ஊகவணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்குபெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது குறைந்த பட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள முதல்வர் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications