'பொன்னாடைகள் வேண்டாம், புத்தகங்கள் ஓகே..' இதுதான் முதல்வரின் பாலிசி.. அன்பளிப்பு புத்தகங்கள் நன்கொடை
சென்னை: தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளைத் தவிர்த்து புத்தகங்களையே அன்பளிப்பாக அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பரிசாக வந்த சுமார் ஆயிரம் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
பொதுவாக அரசியல்வாதிகளைச் சந்திக்க வரும் பிரபலங்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையுமே எடுத்து வருவார்கள்.
இவை பெரும்பாலும் யாருக்குமே பயன்படாது. ஒரு முறை ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பொன்னாடைகளும் பூங்கொத்துகளும் பயன்படும்.

கடையில் கூட வாங்க மாட்டார்கள்
அதன் பிறகு யாரும் அதனை கண்டுக்கொள்ளக் கூட மாட்டார்கள். திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூட ஒரு கூட்டத்தில், பொன்னாடைகளைத் தான் மதிக்க மாட்டேன் என்றும் அது யாருக்கும் பயன் தருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் கடையில் மீண்டும் விற்க அனுப்பினால் கூட, அதைக் கடைக்காரர்களும் வாங்க மறுப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார்.

புத்தகங்கள்
தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த 2017ஆம் ஆண்டு முதலே அவர் இந்த பாலிசியை தான் கடைப்பிடித்து வருகிறார். அப்போது முதலே அவரைச் சந்திக்க வருபவர்கள் பெரும்பாலும் புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள். அப்படி இதுவரை அன்பளிப்பாகக் கிடைத்த 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் நூலகங்களுக்கும் பரிசாக வழங்கியுள்ளார்

முதல்வரான பிறகும் தொடர்கிறது
ஸ்டாலின் முதலமைச்சரான பிறகும்கூட இதே தான் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரும் நபர்கள் பலரும் புத்தங்களை அன்பளிப்பாக அளித்தனர். கொரோனா நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கிய பலரும் புத்தகங்களையும் சேர்ந்தே அளித்தனர். குறிப்பாக, கொரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 50 லட்ச ரூபாய் காசோலை மட்டுமின்றி சில புத்தகங்களையும் வழங்கினார்.
Recommended Video

நன்கொடை வழங்கினார்
கடந்த சில காலமாக முதல்வர் ஸ்டாலின் அன்பளிப்பாகப் பெற்ற சுமார் 1000 புத்தகங்களை எழும்பூரில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். பொது நூலக இயக்கக இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷ் ஆகியோரிடம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

புத்தக வாசிப்பு
புத்தகம் வாசிப்பு பழக்கம் என்பது பரவலாகக் குறைந்து வருகிறது. இதைக் கல்வியாளர்கள் ஆபத்தான ஒரு போக்காக பார்க்கின்றனர். இப்படியொரு சமயத்தில் முதலமைச்சர் எடுத்துள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் குறைந்தது திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால்கூட அது மாற்றத்திற்கு நல்லதொரு தொடக்கமாகவே அமையும்.












Click it and Unblock the Notifications