தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. 486 கோடியே 92 லட்சம் செலவாகும்: முதல்வர் அறிவிப்பு
Recommended Video

சென்னை: தமிழக அரசின் லாபமீட்டும் அரசுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015இன் படி போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு என்பது ரூ.21,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
2017-2018ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் உதவித் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்:

பொதுத்துறை
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

நட்டமடைந்த நிறுவனங்கள்
நட்டமடைந்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் பத்து விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போக்குவரத்து கழகங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள்
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

குடிநீர் வாரியம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டது போல இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

மூன்றரை லட்சம் தொழிலாளர்கள்
இதன்படி, போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 பெறுவார்கள். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 3 லட்சத்து 50 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.486 கோடியே 92 லட்சம் போனஸாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை, அரசு தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும் சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.












Click it and Unblock the Notifications