"வணிகர் நலனை காப்பதில் அக்கறை கொண்டது திமுக!" முக்கிய அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருச்சியில் நடைபெற்ற வணிகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மே 5ஆம் தேதியை வணிகர் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாக மாநிலத்தில் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
வணிகர் தினம் இன்று.. கடைகள் மூடல்.. திருச்சியில் விடியல் வணிகர் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
வணிகர் மாநாடு
பொதுவாகவே வணிகர் தினத்தன்று கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு வணிகர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகக் கடந்த ஆண்டு கடைகள் இயங்கி போதிலும், வணிகர் மாநாடு நடத்தப்படவில்லை. இதனிடையே இந்த ஆண்டு 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு மாநாடு நடத்தப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் இன்று 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தியது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வணிகர்கள் செய்தனர். அரசுக்கு உதவிய வணிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன்.
திருச்சி என்றாலே திருப்புமுனை
வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளைச் செய்தது திமுக அரசு. வணிகர்கள் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசு திமுக. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி தான். திமுகவிற்கு எப்போதும் திருப்புமுனை அளிப்பது திருச்சி தான். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்கான உதவிகளைச் செய்தது திமுக. இந்த ஆட்சி வணிகர்களின் நலனைப் பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும்.
நிதியுதவி அதிகரிப்பு
அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டார்கள். வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வருவாய் காக்கப்படும். வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்தால் போதும்.
வரி விதிப்பு
வணிக நலன் வாரியம் சீரமைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தோம். அதன்படி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின்னர், வரிவிதிப்பு முறைகளை மாற்றும்படி ஜிஎஸ்டி மன்றத்தில் திமுக சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது" என்றார்.