புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழந்தார்.
சென்னை: பிரபல புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்தார். புகைப்பட கலைஞரின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப். கடந்த காலங்களில் இவர் எடுத்த பல புகைப்படங்கள் மாநிலத்தையே அதிர வைப்பதாக இருந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது எடுத்த புகைப்படங்கள் திமுக தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு அடுத்துள்ள மறைமலைநகர் அருகே ஸ்டாலின் ஜேக்கப் சென்று கொண்டிருந்த போது அவரது பைக் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். மேலும், அவருடன் பணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார்.
புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப்பின் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஸ்டாலினும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications