"மாணவர்களை குறைகூறுவதை விடுத்து. மீட்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுங்கள்.." முதல்வர் ஸ்டாலின் சாடல்
சென்னை: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கியது. அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போர் ஆரம்பித்து சுமார் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்னும் கூட அமைதியான சூழல் ஏற்படவில்லை.

உக்ரைன்
இதனால் அங்குப் பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். குறிப்பாக அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் உட்பட இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், உக்ரைன் எல்லையில் இந்தியர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்களை எல்லையைக் கடக்க அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாட்டை விட்டு வெளியேற இயக்கப்படும் ரயில்களிலும் இந்தியர்களை அனுமதிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், மத்திய அரசு மாணவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, மீட்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த இக்கட்டான சூழலில் நமது மாணவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

மத்திய அமைச்சர்கள்
மாணவர்கள் அங்குப் போர்த் தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த எல்லைகளில் உள்ள போது, மத்திய அரசு மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவது இந்திய அரசின் பொறுப்பு. மத்திய அமைச்சர்கள் தேவையற்ற கருத்துகளைக் கூறுவதைப் பிரதமர் மோடி தடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
மேலும், முதல்வர் ஸ்டாலின் மற்றொரு ட்வீட்டில், "உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்" என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் - எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும்! அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்!" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய மாணவர் பலி
முன்னதாக நேற்று உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications