உதவுவதில் நாங்களும் திமுகவும் ஒன்று! இலங்கை மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி! காங்கிரஸ் அறிவிப்பு!
சென்னை: இலங்கைக்கு உதவும் வகையில் தமிழக அரசிடம் தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
மேலும், எப்பொழுதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் காங்கிரஸ் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

திக்குமுக்காடும் இலங்கை
இலங்கையை ஆளுகிற அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இலங்கை அரசை ஆதிக்கம் செலுத்தி வருகிற ராஜபக்சே குடும்பத்தினர் மீது இலங்கை மக்கள் கடும் சினத்தோடு தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திக்குமுக்காடி வருகிறது.

மனிதாபிமான அடிப்படை
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 123 ரூபாய் கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரினார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 உயிர் காக்கும் மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறுவர்களுக்கான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

இலங்கை மக்களுக்கு
இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கிறது.

10 லட்சம் ரூபாய்
அதைப் போல, இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை நடத்தி வருகிற முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்கிற இன்னல்களைப் போக்கிடும் வகையில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்குவதோடு, தி.மு.க.வின் சார்பில் நிதி வழங்குகிற முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்க விரும்புகிறது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications