ஞாயிறு முழு ஊரடங்கு.. இறைச்சி & மீன் கடைகள் திறந்திருக்குமா? தமிழக அரசு கூறுவது என்ன
சென்னை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியான உடன் பொதுமக்களுக்கு எழுந்த கேள்வி ஞாயிறு நாட்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருக்குமா என்பது தான்.
கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தே வந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே மாற்றிப் போட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டிலும் கிட்டதட்ட அதேநிலை தான். பல மாதங்களுக்குப் பின்னர், வைரஸ் பாதிப்பு மீண்டும் மேல் நோக்கிச் செல்ல தொடங்கியுள்ளது. டிச. மாதம் 3ஆவது வாரம் முதலே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழக அரசு எடுக்கத் தொடங்கிவிட்டது. அதேபோல வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.

இரவு ஊரடங்கு
வைரஸ் பாதிப்பு கட்டுகடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பேருந்துகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றில் 50% பார்வையாளர்கள் உடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடைகள்
அதேபோல ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடன் பெரும்பாலான நபர்களுக்கு எழுந்த கேள்வி ஞாயிறு நாட்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருக்குமா என்பது தான். ஏனென்றால், 2ஆம் அலை சமயத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது காய்கறி, இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது வார இறுதி நாட்களில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்தது.

2ஆம் அலை
ஊரடங்கு காலத்தைப் பொதுமக்கள் விடுமுறைக் காலமாகப் பார்க்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் இதே நிலை தான் தொடர்ந்தது. வார இறுதி நாட்களில் எல்லாம் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது, இதனால் கொரோனா வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டதால் அந்த சமயத்தில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. இதனால் இறைச்சி வியாபாரிகளும் சரி, பொதுமக்களும் சரி கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அரசு அறிவிப்பு என்ன
இதனால் இந்த முறை ஞாயிறு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வந்தவுடனேயே முதலில் அனைவரும் எதிர்பார்த்தது இறைச்சிக் கடைகள் திறந்திருக்குமா என்று தான். தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் இறைச்சிக் கடைகளுக்குத் தனியாகக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஞாயிறுகளில் மீன், காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்கச் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications