தமிழகத்தில் 14000ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு.. இந்த 6மாவட்டங்களில் பாசிட்டிவ் விகதம் மோசம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 13,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் ஏற்கனவே பல கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வைரஸ் பரவல் எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ஜன. 31 வரை நீட்டிப்பு.. ஜன. 16ல் முழு ஊரடங்கு! கட்டுப்பாடுகள் என்னென்ன?
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 13 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 19 பேர் உட்பட மொத்தம் 13,990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,14,276ஆக அதிகரித்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 62,767ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் போதியளவு கொரோனா படுக்கைகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,547 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 27,14,643 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 11 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னையில் 4 பேரும் கோவையில் 2 பேருக்கும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,866 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையின் நிலை தான் மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 6190 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சரிபாதிக்குச் சற்றே குறைவு. அதேபோல செங்கல்பட்டில் 1696 பேருக்கும் திருவள்ளூரில் 1054 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
அதேபோல பாசிட்டிவ் விகதமும் 8.7ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 17.4ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 16.4ஆகவும் திருவள்ளூரில் 14.8ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. இந்த 3 மாவட்டங்களைத் தவிரும் சில மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் மோசமாக உள்ளது. ராணிப்பேட்டை (14.7), நெல்லை (10.2), வேலூர் (10.2) ஆகிய மாவட்டங்களிலும் பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது.