தமிழகத்தில் 75,000 தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்.. இன்று ஒரே நாளில் 15,339 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 15379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் வரும் ஜன. 14 முதல் ஜன.18 வரை வழிபாட்டுத்தலங்களைத் திறக்க தடை எனக் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தினசரி கொரோனா பாதிப்பு
இருப்பினும், தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 43 பேர் உட்பட மொத்தம் 15,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,29,655ஆக அதிகரித்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
குறிப்பாக ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. நேற்று 62,767ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இப்போது 75,083ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 3043 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 27,17,686 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 10-12 என்ற அளவில் இருந்த உயிரிழப்புகள் இன்று 20ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் என மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உயிரிழப்புகள் 36,886ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
இன்று தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 40%க்கு மேல் தலைநகர் சென்னையில் பதிவாகியுள்ளது. அதாவது சென்னையில் ஒரே நாளில் 6484 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலும் 1665 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு பாசிட்டிவ் விகதமும் இன்று 10ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னை மற்றும் செங்கல்பட்டில் பாசிட்டிவ் விகிதம் 18ஐ தாண்டியுள்ளது. இவை தவிரக் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பாசிட்டிவ் விகிதம் 10ஐ தொட்டுள்ளது.












Click it and Unblock the Notifications