தமிழகத்தில் 2 லட்சத்திற்கு கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. தொடர்ந்து குறையும் பாசிட்டிவ் ரேட்
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16,096ஆக குறைந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் தற்போது மாநிலத்தில் 1,88,599ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது.
இதனிடையே கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றைய தினம் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 21ஆம் தேதி தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 30,718 வரை சென்றது. இருப்பினும், அதன் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 3 பேர் உட்பட மொத்தம் 16,096 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,61,316ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. நேற்று 2 லட்சத்திற்குக் கீழ் குறைந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் நேற்று 1,98,130 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 1,88,599ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25,592 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,35,118ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
அதேபோல மாநிலத்தில் தினசரி உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஜன.29இல் தினசரி உயிரிழப்பு 46ஆக இருந்தது. அது இன்று 35ஆக குறைந்துள்ளது. அவர்களில் 21 தனியார் மருத்துவமனைகளிலும் 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,599 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இப்போது அது 14.8ஆக உள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பில் அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 2348 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 1897 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.












Click it and Unblock the Notifications